என் மலர்
- புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
- புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
சென்னை:
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
- இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும் என்றார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.
புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்.
2026-ம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என தெரிவித்துள்ளது.
- சீனாவின் பீஜிங்கில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
- இதில் பேசிய சீன வெளியுறவு மந்திரி, இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.
பீஜிங்:
பீஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது தாங்கள் மத்தியஸ்தம் செய்ததாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் மோதல்களைத் தீர்ப்பதிலும், நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் சீனா நியாயமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறிவரும் நிலையில் சீன மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
- 29 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.
புதுடெல்லி:
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, புளோரிடாவில் அதிபர் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது அதிபர் டிரம்ப், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என பெருமையுடன் பேசினார்.
நீண்டகால போர்களை முடிவுக்கு கொண்டுவந்த தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ராஜதந்திரமாக இத்தனை போர்களை நிறுத்தியும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கோ வெளிநாடுகள் அனைத்தும் தங்களின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 10 நாடுகள் தங்களின் உயரிய விருதுகளை வழங்கியுள்ளன.
இதுவரை 29 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:

2016:
ஏப்ரல் 3: சவுதி அரேபியா - ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்
ஜூன் 4: ஆப்கானிஸ்தான் - ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான் விருது.
2018, பிப்ரவரி 10: பாலஸ்தீனம் - கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது
2019
ஜூன் 8: மாலத்தீவு - ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன் விருது.
ஆகஸ்ட் 24: ஐக்கிய அரபு அமீரகம் - ஆர்டர் ஆஃப் சயீத் விருது.
ஆகஸ்ட் 24: பஹ்ரைன் - கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ் விருது.
2020, டிசம்பர் 21: அமெரிக்கா - லீஜியன் ஆப் தி மெரிட் விருது.
2023:
மே 22: பிஜி - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி விருது
மே 22: பப்புவா நியூ கினியா - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ விருது.
மே 22: பலாவ் - பலாவ் குடியரசு எபகல் விருது.
ஜூன் 25: எகிப்து - ஆர்டர் ஆப் தி நைல் விருது.
ஜூலை 14: பிரான்ஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது.
ஆகஸ்ட் 25: கிரீஸ் - தி கிராண்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர் விருது.
2024:
மார்ச் 22: பூடான் - ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ விருது.
ஜூலை 9: ரஷியா - ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது.
நவம்பர் 17: நைஜீரியா - கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருது.
நவம்பர் 20: டொமினிகா -டொமினிகோ அவார்ட் ஆஃப் ஹானர் விருது.
நவம்பர் 20: கயானா - ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது.
டிசம்பர் 22: குவைத் - தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது.

2025:
மார்ச் 5: பார்படாஸ் - ஹானரி ஆஃப் பிரீடம் விருது.
மார்ச் 11: மொரீஷியஸ் - ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் விருது.
ஏப்ரல் 5: இலங்கை - மித்ர விபூஷணயா விருது.
ஜூன் 16: சைப்ரஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III விருது.
ஜூலை 2: கானா - தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது.
ஜூலை 4: டிரினிடாட் மற்றும் டொபாகோ - தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது
ஜூலை 8: பிரேசில் - தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது.
ஜூலை 9: நமீபியா - ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் விருது.
டிசம்பர் 16 : எத்தியோப்பியா - கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா விருது
டிசம்பர் 18 : ஓமன் - தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன் விருது.
- புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் அஜித் குமார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
புதிதாக பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பூர் அருகிலுள்ள வெள்ளகோயில் அருகே கொங்குநாடு ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அஜித் குமார் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாகவும், உங்கள் வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- 2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
- இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்பதற்கான டோக்கன் வழங்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.
- 860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நக்சலிசத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு "2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத பாரதம்" என்ற இலக்கை நிர்ணயித்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்புப் படைகள் நக்சலைட்டுகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.

சுமார் 1,973-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பொதுவாழ்விற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இது அதிகளவில் நிகழ்ந்துள்ளது.
860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் இந்த ஆண்டில் வீழ்த்தப்பட்டனர்.
மத்வி ஹித்மா: நக்சல் இயக்கத்தின் மிகவும் தேடப்பட்ட மற்றும் கொடூரமான கமாண்டர்களில் ஒருவரான இவர், நவம்பர் 2025-ல் சத்தீஸ்கர்-ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது பல கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

கணேஷ் உய்கே: மத்திய குழு உறுப்பினர் மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரான இவர், டிசம்பர் 2025-ல் ஒடிசாவின் கந்தமால் பகுதியில் கொல்லப்பட்டார். இவர் மீது ரூ.1.1 கோடி வெகுமதி இருந்தது.

கேசவ ராவ் (எ) பசவராஜ்: ஜூன் 2025-ல் மற்றொரு மூத்த தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சலபதி மற்றும் அருணா: ஜனவரி 2025-ல் சத்தீஸ்கர்- ஒடிசா எல்லையில் நடந்த தாக்குதலில் மத்திய குழு உறுப்பினர் சலபதி மற்றும் அவரது மனைவி அருணா உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

சத்தீஸ்கரின் கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் 21 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த வேட்டையில், 27 கடினமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இங்கிருந்த மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலை மற்றும் பயிற்சி முகாம்களைப் பாதுகாப்புப் படைகள் தகர்த்தன.
நக்சல் பாதிப்பு குறைந்த மாவட்டங்கள்
அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2014-ல் 126 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 2025-ல் வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதில் மிகத் தீவிர பாதிப்புள்ள மாவட்டங்கள் வெறும் 3 மட்டுமே மிஞ்சியுள்ளன.
அபுஜ்மர் (Abujhmad) மற்றும் வடக்கு பஸ்தர் போன்ற பல ஆண்டுகளாக நக்சல் கோட்டைகளாக இருந்த இடங்கள் இப்போது "நக்சல் அற்ற பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளன.

வெறும் ஆயுதப் போர் மட்டுமின்றி, "பேச்சுவார்த்தை - பாதுகாப்பு - ஒருங்கிணைப்பு" என்ற மும்முனை உத்தியையும் மத்திய அரசு கையாண்டது. சரணடையும் நக்சலைட்டுகளுக்கு நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை அரசு வழங்குகிறது.
நக்சல் பகுதிகளில் 17,500 கி.மீ சாலைகள், 5,000 மொபைல் கோபுரங்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் 2025-க்குள் நிறுவப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபடி, 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்ற இலக்கை நோக்கி 2025-ம் ஆண்டின் வெற்றிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.
- கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
- நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம்.
பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, நடந்தவை யாவும் நன்மைக்கே எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை. மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது.
தர்மம் தாமதிக்கலாம். ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும் என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026- ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும்.
நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்' என்பதே அந்த நம்பிக்கை.
இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம்.
இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும். சேவை மனப்பான்மையோடும் 2016-ஐ பாமக-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இவ்வாறு ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய சூரியபிரதாப் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் புத்தாண்டு தினமான நாளை காலை 11 மணிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
- எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது.
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானது குறித்து ஆதவ் அர்ஜூனா கூறுகையில் "எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. கரூர் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். எங்கள் குடும்பத்தில் 41 பேரை இழந்துள்ளோம். உண்மைக்காக போராடி வருகிறோம்.
அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அறிவில்லாத துறையை கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையை கொடுத்து அரசை அவமானப்படுத்த வேண்டாம்" என்றார்.











